Sunday 5 June 2011

இது சரியா?


ஒரு இளம் பெண்ணை வன்புணர முயன்று, அப்பெண்ணை படுகாயப்படுத்திவிட்டு ஓடியவரை, ஊர் மக்கள் விரட்டிப் பிடித்து கல்லால் அடித்து, தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநிலம், வாரங்கல், பெருமண்டலகுடம் என்னும் ஊரைச் சேர்ந்த ஜில்லா பாபு என்பவர் தென்னை மரத்துக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் நேற்று செவ்வாய் அன்று மதியம் ரகுநாத்பள்ளி கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வீட்டில் 18 வயது நிரம்பிய மௌனிகா என்ற இளம் பெண் தனியாக இருப்பதைக் கண்டுள்ளார். அவரிடம் ஜில்லா பாபு தாகத்திற்குத் தண்ணீர் கேட்கவே அப்பெண் வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்தொடர்ந்து உள்ளே நுழைந்த ஜில்லா பாபு, அப்பெண்ணை வன்புணர முயன்றுள்ளார். அதை எதிர்த்து அப்பெண் போராட, அருகில் இருந்த சுத்தியலால் அப்பெண்ணைத் தாக்கி இரத்த வெள்ளத்தில் வீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளார் ஜில்லா பாபு.

அவர் வேகமாய் நழுவுவதைக் கண்டு சந்தேகமுற்ற அண்டை வீட்டுக்காரர் ஒருவர், மௌனிகா தம் வீட்டில் தனியாக இருப்பதை உணர்ந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மௌனிகா இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு அவர் கூச்சல் எழுப்ப, கிராமத்தினர் திரண்டு வந்து தப்பியோடிய ஜில்லா பாபுவைப் பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

பிறகு வந்து சேர்ந்த காவல்துறையினர் ஜில்லா பாபுவைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் இடையே புகுந்து, ஜில்லா பாபுவை விடுவித்து இழுத்துச் சென்றுள்ளனர். கிராமத்தின் முச்சந்தியில் ஜில்லா பாபுவை நிறுத்தி வைத்து, கல்லால் சரமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவர் மீது வைக்கோல் சுற்றி, அதில் மண்ணெண்ணெய் ஊற்றி, உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். மற்ற கிராம மக்கள் காவல்துறையினர் இதில் தலையிடாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர். ஜில்லா பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.பிரபாகர் ராவ், உதவி கண்காணிப்பாளர்கள் வெங்கடேஸ்வர் ராவ் (மன்னூர்), அஜய் குமார் (வாராங்கல்), மற்றும் உயர் அதிகாரிகள் விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநில தலைமையகத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மௌனிகாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரை மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் போஜ்ஜா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment